*இணையத்தில் வீடியோ வைரல்
திருமலை : ரேணிகுண்டாவில் ஊழியர்கள் அலட்சியத்தால் பயணிகளை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை விட்டு சென்றது. தற்போது, அதனுடைய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம், புவனேஸ்வருக்கு (02810) ஏசி சிறப்பு அதிவிரைவு ரயில் தினந்தோறும் இரவு 10.10 மணிக்கு புறப்படும். அவ்வாறு இந்த ரயில் கடந்த 23ம்தேதி ரேணிகுண்டா சந்திப்பில் பிளாட்பாரம் எண் 2ல் வரும் என்று அறிவிப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் முன்கூட்டியே அறிவித்தனர். இதனால், பயணிகள் அனைவரும் பிளாட்பாரம் எண் 2ல் ரயிலுக்காக காத்திருந்தனர்.
ஆனால், ரயில் 5வது பிளாட்பாரத்தில் வந்து நின்று புறப்பட்டு சென்றது. ரயில் சென்ற பின்னர் கவனித்த 100 பயணிகள் ரயில்வே ஊழியர்கள் மீது கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதன் பின்னால் திருப்பதியில் இருந்து காக்கிநாடா செல்லும் ரயில் வந்ததால் அதில் பயணிகளை ஏற்றி நெல்லூர் வரை அனுப்பி வைத்தனர். இந்த ரயில் நெல்லூர் செல்லும் வரை சிறப்பு ரயிலை நெல்லூரில் நிறுத்தி வைத்து பயணிகளை அந்த ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ரயில் வருகை, புறப்படும் நேரம் குறித்த அறிவிப்பாளர் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதால் இந்த தவறு நடந்ததாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை பயணிகள் வீடியோ எடுத்து தற்போது சமூக வளைதளத்தில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.