சென்னை: ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கீல் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கோவை காவல் ஆணையர் விளக்கம் அளித்தார். மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய் ராஜாவின் காலில் குண்டடிப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்தவும், உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது; கோவை மாநகர காவல் ஆணையர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது; சஞ்சய் ராஜாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்தை பார்த்ததாகவும் இனி இதுபோன்ற செயல் நடைபெறாது எனவும் ஆணையர் உறுதி அளித்தார். ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவும் விளக்கம் அளித்தார். தற்போது வழங்கப்படும் சிகிச்சையை தொடர உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஏப்.3-க்கு ஒத்திவைத்தார்.