சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் ஆஜரான முரளிதர், கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை. முழுமையாக ஆய்வு செய்த பிறகே, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று வாதிட்டார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சொத்துகள் தொடர்பாக அளித்த விளக்கத்தை லஞ்ச ஒழிப்பு துறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மருத்துவ செலவை, அவரது சம்பந்தி செலுத்தினார்.
அந்த தொகையை அரசு திரும்ப அளித்தது. அந்த தொகையை லஞ்ச ஒழிப்பு துறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று வாதிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிந்ததை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் வாதத்துக்காக வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.