![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/3-129.jpg?type=webp&quality=80)
சூலூர்: சூலூர் அருகே போலீசாரிடம் கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் தென்னம்பாளையம் பகுதியில் போலீஸ் என கூறி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும், கஞ்சா வேண்டுமென கேட்டு போனில் அழைப்பவர்களுக்கு டோர் டெலிவரி செய்து வருவதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனையாளர்களிடம் போனில் தொடர்பு கொண்டு ‘கஞ்சா வேண்டும். எங்கு வரவேண்டும்’ என கேட்டுள்ளனர். மறுமுனையில் பேசியவர், ‘தென்னம்பாளையம் பகுதியில் உள்ள 4 ரோடு சந்திப்புக்கு வந்தால் கஞ்சா கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார்.
உடனே போலீசார் விரைந்தனர். அப்போது அங்கு சொகுசு காரில் வந்த இருவர், தனிப்படை போலீசாரிடம் கஞ்சாவை காண்பித்து, ‘எக்ஸ்கியூஸ் மீ.. கஞ்சா வேணுமா’ என கேட்டு விற்பனை செய்தனர். கஞ்சாவை பெற்ற போலீசார், தங்களுக்கு மேலும் 2 கிலோ கஞ்சா வேண்டும் எனவும், சூலூர் காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றுக்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறும் தெரிவித்தனர். இதனை உண்மையென நம்பி அங்கு வந்த கஞ்சா வியாபாரிகள் இருவரையும் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார், சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சோமனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீபதி (58), சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (48) என்பதும், போலீஸ் போர்வையில் கோவை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசிடமே கஞ்சா விற்கிறோம் என்று தெரியாமல் கஞ்சா விற்று இருவர் சிக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.