பள்ளிப்பட்டு: ஆர்.கே. பேட்டை அருகே, அனுமதியை மீறி அதிகளவு கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே, ஆதிவராகபுரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த ஏரியில் நில சீர்திருத்தம் செய்ய ஏதுவாக பொதுப்பணித்துறை சார்பாக, கிராவல் மண் எடுக்க குறிப்பிட்ட நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் செல்லாதூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு 46 லோடு கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அனுமதியை மீறி அதிகளவிலான மண்ணை அவர் டிராக்டர்களில் எடுத்துச் சென்று வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஆதிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் விஜயகுமாரை நேற்று சந்தித்து புகார் மனு வழங்கினார். அரசு அனுமதியை மீறி அதிகளவில் கிராவல் மண் எடுக்கப்படுவதாகவும், உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் அவர் கூறியிருந்தார்.