திருப்புவனம்: திருப்புவனம் அருகே, கொந்தகையில் நடந்து வரும் 4ம் கட்ட அகழாய்வில் 9 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், கீழடி அருகே உள்ள கொந்தகையில் ஏற்கனவே நடந்த 3 கட்ட அகழாய்வுகளில் 136 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இந்த தாழிகளில் இருந்த எலும்புகள், மண்டை ஓடுகள், இரும்பு ஆயுதங்கள், சூது பவளம், நெல்மணிகள், கருப்பு, சிவப்பு பானைகள் ஆகியவை வெளியே எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணு பிரிவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கொந்தகையில் கடந்த மே 18ம் தேதி 4ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்த அகழாய்வில் கடந்த மாதம் இறுதி வரை 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய குழி தோண்டும் பணி நேற்று நடைபெற்றது. இதில், 9 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சிறிதும் பெரிதுமான இந்த தாழிகள் சிதிலமடைந்துள்ளன. ஏற்கனவே, 16 தாழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், 9 தாழிகள் கண்டயறிப்பட்டுள்ளன. மொத்தம் 25 தாழிகளில் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி விரைவில் நடைபெறும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.