சென்னை: பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய முன்னாள் பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். சென்னை, பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு பியூலா என்ற நபரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரவள்ளூர் நோக்கி வந்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டணமாக ரூ.80 கேட்டுள்ளார். அதற்கு பியூலா ரூ.50 தான் தரமுடியும் என்று ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பியூலா தனது மகன் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மதுபோதையில் வந்த அவர் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஜோசப் தான் மறைத்து வைத்திருந்த ஏர்கன்னை எடுத்து ஆட்டோ டிரைவரை சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். துப்பாக்கியை பார்த்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் குமார் சத்தம் போட்டுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோசப்பை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட ஜோசப் பாஜவில் கல்வி வளர்ச்சி பிரிவு நிர்வாகியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.