Monday, May 20, 2024
Home » தேர்வுப் பயமா? தேவையேயில்லை..!

தேர்வுப் பயமா? தேவையேயில்லை..!

by Porselvi

மாணவ செல்வங்களுக்கு தற்சமயம் தேர்வுகள் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. பரிட்சை என்றாலே ஒருவித மனப் பதற்றம் வந்துவிடும் நம் கண்மணிகளுக்கு. அது போதாமல் ஆளாளுக்கு அறிவுரைகள் சொல்வதுமே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும் நம் செல்வங்களுக்கு. ஆனாலும் உங்கள் மேல் கொண்ட அன்பினாலும் அக்கறையினாலும்தானே சொல்கிறார்கள் நம் நலம் விரும்பிகள்.. நம் ஊரில் தேர்வு என்றாலே ஏதோ ஒரு பேய், பிசாசு, பூதம் என உருவகப்படுத்தி அதற்கு ஒரு கற்பிதங்களை கற்பித்து ஒரு தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கி விடுகிறார்கள். தேர்வு என்பது நாம் இதுவரை கற்றதை திரும்ப மனதுக்குள் மறு உருவாக்கம் செய்து பார்க்கும் ஒர் சந்தர்ப்பம்தான் என நினைத்துக் கொள்ளலாமே. எந்த தேர்வுகளுமே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் கடைசி அஸ்திரமல்ல… அது நம் எதிர்கால வாழ்க்கையைத் திறந்து பார்க்க உதவும் ஒரு திறவுகோல் என்பதே உண்மை. நம் வாழ்வில் பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட துறையில் நமது செயல்பாடுகள் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள். எனவே தேவையற்ற பதற்றத்தை குறைத்துக்கொள்வதே சாலச் சிறந்தது எனலாம்.

தேர்வா கவலையே வேண்டாமே.. ! ஏற்கனவே படித்த பாடங்களை மட்டுமே ரிவிஷன் செய்யலாம். தேர்வுக் காலத்தில் எளிதில் செரிக்கும் உணவினை உண்ணலாம். பட்டினியாக மட்டும் இருக்கவே கூடாது. மனப் பதற்றம் தவிர்க்க ஒரு பத்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை நல்ல பலனைத் தரும். படிப்பின் இடையிடையே ஒரு ஐந்து நிமிடம் ஒரு நல்ல பாடலை, இசையைக் கேட்கலாம். தவறேயில்லை. அது நமது மனப்பதற்றத்தினை குறைத்து உற்சாகம் கொள்ள வைக்கும். தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துவிடுவோமோ என அடிக்கடி நினைப்பதும், தன் மீது பெற்றோர்கள், ஆசிரியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து விடுவோமோ என்கிற பதற்றமும் தேவையற்றது.

தேர்வு நேரப் பதற்றத்தை தவிர்க்கும் வழிகள். .!

கடைசி நேரத்தில் புதிய பாடங்களை படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஓய்வு உளைச்சல் இல்லாமல் தொடர்ந்து படிப்பது தவறு. ஒவ்வொரு பாடத்திற்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளியில் பத்து நிமிடம் ஓய்வெடுத்தபின் படிப்பதே சிறந்தது. இரவெல்லாம் கண்விழித்து மறுநாள் பள்ளியில் சோர்ந்து போவதை தவிர்க்க சீக்கிரம் உறங்கி பின் விடியற்காலையில் எழுந்து படிப்பதே சிறந்தது. தேர்வு நேரத்தில் நண்பர்களிடம் விவாதிப்பதைக் குறைத்துகொள்ளலாம். இந்த பாடத்தை படித்தாயா? என சட்டென கேட்பதும் உங்கள் நண்பர்களை திடீர் பதற்றத்தில் ஆழ்த்தும். தேர்வு முடிந்தபின் அந்த கேள்வித்தாளை வைத்து நண்பர்களுடன் விடைகளை விவாதிப்பதும் தவறு. ஏதேனும் கேள்விக்குத் தவறான விடை எழுதியிருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி அடுத்து வரும் தேர்விற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும்.
– தனுஜா ஜெயராமன்

பெற்றோர்களுக்கு…!
 பிள்ளைகளை மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக நினைக்காதீர்கள்..
 அவர்களது நண்பர்களின் படிக்கும் திறனோடு ஒப்பிடாதீர்கள்..
 முக்கியமாக உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்..
 தேர்வு நேரத்தில் சரிவிகித சத்தான உணவினைக் கொடுங்கள்..
 படிப்பதற்கான அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்..
 குறிப்பாக மதிப்பெண் குறைந்தாலோ தேர்வில் தோல்வியடைந்தாலோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களையும் ஏற்றுக் கொள்ளத் தயார்ப்படுத்துங்கள். அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்…

 

You may also like

Leave a Comment

20 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi