சென்னை: சென்னையை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் (8,848 மீட்டர்) ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண். இவர், கடந்த ஏப்ரல் 2ம் தேதி சென்னையிலிருந்து காட்மாண்டு சென்றார். 5ம்தேதி கேம்பிற்கு பயணம் தொடங்கினார். 19ம் தேதி லோபுச் பகுதி உயரத்தை (20075 அடி – 6119 – மீட்டர் உயரம்) அடைந்தார். மே 18ம் தேதி மவுண்ட் எவரெஸ்ட்டுக்கு பயணத்தை தொடங்கினார். 23ம் தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார். 24ம் தேதி கேம்ப்-2க்கு வந்தார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில், ‘‘எவரெஸ்ட் உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி முத்தமிழ்ச் செல்விக்கு வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்: முத்தமிழ்ச்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நிதிஉதவியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கி இருந்தார். மேலும் கூடுதல் நிதியுதவி வழங்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்ததால் தன்னார்வல அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.