Tuesday, April 30, 2024
Home » அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னை மக்களை வாட்டும் வெயில்: மாலையில் பூங்கா, கடற்கரையில் கூடிய மக்கள் கூட்டம்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னை மக்களை வாட்டும் வெயில்: மாலையில் பூங்கா, கடற்கரையில் கூடிய மக்கள் கூட்டம்

by Ranjith

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, சென்னையில் நேற்று வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருந்தனர். சாலைகளில் பெரிய அளவில் பொது போக்குவரத்து, மோட்டார் சைக்கிள், கார் போன்ற தனியார் போக்குவரத்தும் குறைவாகவே காணப்பட்டது. காலையில் பட்ட அவஸ்தையை மறக்க பொதுமக்கள், மாலை நேரத்தில் இயற்கை காற்றை அனுபவிப்பதற்காக பூங்கா, கடற்கரையை நோக்கி படையெடுத்தனர். தமிழகம் முழுவதும், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கத்தால் மக்கள் காலை 11 மணிக்கு மேல் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்க்க தொடங்கினர். வீடுகளிலேயே முடங்கி இருந்த காட்சியை காண முடிந்தது. இந்நிலையில், வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்தரி வெயில் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. கத்திரி வெயில் தொடங்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, நேற்று காலை முதல் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. 11 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு சுட்டெரிக்க தொடங்கியது. இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். பிற்பகல் வேளையில் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவாகவேது காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழை விடுமுறை தினம் வேறு. அனைவரும் வீட்டில் இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியும், வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இயற்கை காற்றை சுவாசிக்கவும் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதியை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால், மாலை 4 மணி முதல் கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக கடற்கரை பகுதிகள் காட்சியளித்தன. குடும்பத்துடன் வந்து கடற்கரை பகுதியில் மக்கள் பொழுதை போக்கினர்.

இதேபோல சென்னையில் உள்ள சிறிய பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சிறுவர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. வீட்டில் இருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாமல் பூங்காக்களுக்கு வெளியே சிறு, சிறு கடைகளில் விற்பனை களைக்கட்டியது.

* சாலைகளில் முளைத்த பழக்கடைகள்
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலுக்கு இதமான பழங்கள் வரத்தும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சாலையோரங்களில் தர்பூசணி, கிர்ணி பழம், சாத்துக்குடி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி செல்லும் காட்சியை காண முடிந்தது. தர்ப்பூசணி ஒரு பீஸ் ரூ.10க்கும், இளநீர் தரத்துக்கு ஏற்றார் போல் ரூ.30, ரூ.40க்கும், வெள்ளரிக்காய் 3 துண்டு ரூ.10க்கும், மோர் ஒரு கிளாஸ் ரூ.10க்கும் விற்கப்பட்டது. இதே போல எலுமிச்சை சர்பத், கிர்ணிப்பழம், மாதுளம்பழம், ஆரஞ்ச் பழம் உள்ளிட்ட பழங்கள் ஜூஸ் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

You may also like

Leave a Comment

twenty − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi