சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், வடக்கு திசையில் இருந்துதெற்கு நோக்கி வீசிய குளிர் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இரவில் குளிரும், காலையில் பனி மூட்டமும் நிலவி வந்தது. இந்நிலையில், காற்றின் ஈரப்பதம் குறையத் தொடங்கியதை அடுத்து, வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதில் அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 100 டிகிரி வெயில் நிலவியது. மேலும், நீலகிரி, கரூர், ராமநாதபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 12ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் வெயில், பிப்வரி மாதமே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.