சென்னை: தொழில்முனைவோர்களைக் காத்து நம் இலக்கை நோக்கி விரைவோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந் தேதி பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா நடைபெற்றது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், பெருந்தொழில்களைப் போல் குறு, சிறு தொழில்களும் வளர வேண்டும்.
நாட்டைத் தாங்கிப் பிடிப்பதில் MSME க்களின் பங்கு இன்றியமையாதது. 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723 கோடி மதிப்பிலான முதலீடுகளை உறுதி செய்யும் நாளாக இந்த MSMEday அமைந்தது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. கொடூர், மணப்பாறை & சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் மூன்று தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. 21,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் திறக்கப்பட்டது. சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுத்தொகை, #FaMe_TN & #SIDBI இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் MSME-க்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தொழில்முனைவோர்களைக் காத்து நம் இலக்கை நோக்கி விரைவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.