மும்பை: நடுவானில் விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது. இதில் தானும், நடிகை ஸ்ரத்தா கபூர் மற்றும் பயணிகள் அனைவரும் உயிர் தப்பியதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.
தற்போது ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், இன்று மும்பையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் பயணித்தார். அவருடன் நடிகை ஸ்ரத்தா கபூர் உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களில், திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக மும்பைக்கு திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா மந்தனா, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர் தப்பியதாகவும் மற்றும் தானும், ஸ்ரத்தா கபூரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.