சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் எனக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக செந்தில் பாலாஜியை ஏப். 22ம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குமேல் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அவருக்கு வங்கி தொடர்பான அசல் ஆவணங்கள் வழங்கப்பட்டு அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், விடுவிக்க கோரிய மனு மீது வரும் 25ம் தேதி முதல் வாதங்களை தொடங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.அவரது நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.