தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும், கைது செய்தாலும் ஒன்றிய அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இயற்கை பேரழிவில் அதிகம் பாதிக்கப்படுவதும் மீனவர்கள்தான். ஆனால் இவர்களது வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிய அரசு தவறிவிடுகிறது. ஒக்கி புயலின்போது, கன்னியாகுமரி மீனவர்களை காக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுக்காதது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல், மீன்பிடி வலைகள் அறுப்பு, மீனவர்கள் சிறைபிடிப்பு, கண்டித்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்ற தலைப்பு செய்திகள் வெளிவராத நாட்களே இல்லை.
இலங்கை கடற்படையினரால் கடந்த 2 ஆண்டுகளில் 504 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைந்தது. இதனால், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கை குறைந்திருந்தது. ஆனால் 2022-ம் ஆண்டில் 36 தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 264 மீனவர்களை கைது செய்தனர்.
2023-ம் ஆண்டில், இலங்கை கடற்படையினர் 243 தமிழக மீனவர்களை கைது செய்தனர். 37 படகுகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த 28 நாட்களில், 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டன. இப்படி அடிக்கடி, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை வசம் தற்போதுள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். 03-01-2024 அன்று பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 05-12-2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழுகிற மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பது நமது முதன்மையான கடமை.
அதேவேளை, இது – இரு நாட்டு பிரச்னை என்பதால், தீர்வுகாண வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசின் கையில் உள்ளது. சர்வதேச அளவில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என ஒன்றிய அரசு மார்தட்டுகிறது. ஆனால், நம் மீனவர்கள் அந்நிய நாட்டு சிறையில் வாடுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?. ஒரே தேசம், ஒரே மக்கள் என்று கோஷமிடும் ஒன்றிய அரசு தமிழர்கள்தானே என எப்போதும்போல இருந்துவிடாமல் மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் என பெரும்பாலான மீனவர்கள் வாழும் நீண்ட கடற்கரை மாநிலங்களில், பாஜவுக்கு சொல்லும் அளவிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. அதனால், ஒன்றிய அரசு, மீனவர்கள் விவகாரத்தில் பாராமுகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. மீனவர்கள் கடல்சார் பழங்குடிகள். அவர்களை அங்கீகரித்து, அவர்களது வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் வெளிப்புற சக்திகளிடமிருந்து காக்க, ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.