சென்னை: சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் நகருக்கு செல்ல வேண்டிய லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. ஜெர்மன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். இந்த விமான நிறுவனம், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தில், சமீப காலமாக ஊதிய உயர்வு கேட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அதனால் நாடு முழுவதும் லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று ஒருநாள் மீண்டும் லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜெர்மன் நாட்டில் பிராங்க்பர்ட் நகரில் இருந்து தினமும் நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை வரும் லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் அதிகாலை 1.50 மணிக்கு பிராங்க்பர்ட் புறப்பட்டு செல்லும். அதேபோல், நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு பிராங்பர்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன் லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. ஆனால் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.50 மணிக்கு, பிராங்க்பர்ட் நகருக்கு புறப்பட வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிராங்க்பர்ட் நகருக்கு நேற்று 250க்கும் மேற்பட்ட பயணிகள் செல்ல இருந்தனர். அவர்களுக்கு விமான நிறுவனம் மூலம் ஏற்கனவே, இணையதளம் மற்றும் செல்போன் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான பயணிகள் வரவில்லை. தகவல் கிடைக்காத பயணிகள் பலர் விமான நிலையம் வந்துவிட்டு திரும்பி சென்றனர். இந்த விமானம் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணைப்பு விமானமாக இருப்பதால் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.