சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021ம் ஆண்டு பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. அதில் ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2007ம் ஆண்டு சுஷில்ஹரி பள்ளியில் படித்த மாணவி 2021ம் ஆண்டு புகாரளித்ததாக காவல்துறை கூறியுள்ளது.
ஆனால் தற்போது அந்த மாணவி ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இமெயில் மூலமாக புகாரளித்ததாக கூறப்படும் நிலையில் புகாரின் உண்மைத்தன்மையை அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, புகாரளித்த மாணவியை செப்டம்பர் 15ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யுமாறு சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர் கோரியதை நீதிபதி ஏற்க மறுத்து விசாரணையை தள்ளிவைத்தார்.