கம்பம்: யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை இன்று திடீர் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தற்போது நீர்வரத்து சீராக உள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் மலை பிரதேசங்களுக்கு படை எடுக்கின்றனர்.
சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை, தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈழக்காடு ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழையினால் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவியில் நீர்வரத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் அருவியில் குளிக்கவும், நுழையவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.