வருசநாடு : கடமலைக்குண்டு அருகே, ஏழுசுனை பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆழ்துளை கிணறுபைப் லைனை காட்டுயானைகள் சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.கடமலைக்குண்டு அருகே ஏழுசுனை மலையடிவாரத்தில் ராமராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம், அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தின. இது தொடர்பான புகாரின்பேரில் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க கண்டமனூர் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதிக்கு யானை கூட்டம் வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பெத்து என்பவரது தோட்டத்தில் புகுந்து, அங்கிருந்த இலவ மரங்களை உடைத்து சேதப்படுத்தின. அதேபோல குடிநீர் தேடி தோட்டத்தில் பதிக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு பைப் லைனை உடைத்து சேதப்படுத்தின. இது குறித்து கண்டமனூர் வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் வெடிகள் வெடித்து யானைக்கூட்டத்தை மலைப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இருப்பினும் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘அருகில் உள்ள மலையடிவாரத்தில் யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. எனவே மீண்டும் உணவு, குடிநீர் தேடி தோட்டத்திற்குள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து யானைக்கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும்’’ என்றனர்.