Saturday, July 27, 2024
Home » தேர்தல் முடிந்த பின்னர் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உதவித்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேர்தல் முடிந்த பின்னர் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உதவித்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

by Karthik Yash

சென்னை: திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆவடியில் கூடியிருந்த மக்கள் வெள்ளத்திற்கு நடுவே திறந்த வேனில் நின்றபடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியதாவது: இந்த முறை திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சசிகாந்த் செந்திலை வெற்றி பெற செய்ய வேண்டும். எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே இடத்தில் அண்ணன் நாசருக்கு பிரசாரம் செய்தபோது, 56,000 வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்துள்ளீர்கள். அதற்காகவும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மூன்று ஆண்டுகளில் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் 450 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தான் அத்திட்டத்தின் வெற்றி. பெண்கள் அரசு பள்ளியில் பயின்றால் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார். அதன் மூலம் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 3.5 லட்சம் மாணவிகள் பயனடைந்தனர். மாணவர்களும் அரசு பள்ளியில் பயின்று, கல்லூரிக்கு சென்றால் அவர்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எல்லாருக்கும் எல்லாமும் வழங்குவது தான் திராவிட மாடல் ஆட்சி. காலை உணவு திட்டம், மூலம் ஒன்று முதல் 5 வரை உள்ள மாணவர்கள் தினமும் 18 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் இதுவரை 1.16 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். தேர்தல் முடிந்த பின், 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தமிழகத்தில் நாமெல்லாம் ஒரு ரூபாய் வரி கட்டினால், ஒன்றிய அரசு நமக்கு வெறும் 28 பைசா தான் திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ., ஆளும் குஜராத் போன்ற மாநிலங்களில் அவை அதிகரித்து வழங்கப்படுகின்றன. 2010ல் நாடு முழுவதும் நீட் தேர்வு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் நீட் தேர்வை கலைஞர் விடவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் இருந்தவரைக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை.

அவர் மறைந்த பிறகு, இங்குள்ள அடிமை கும்பல் பாஜவுக்கு பயந்து நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைந்தார்கள். இதுவரை 22 குழந்தைகள் நீட் தேர்வால் இறந்துள்ளனர். மிக்ஜாம் புயலில் தமிழகத்தில் அனைவரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது, வராத பிரதமர் இப்போது ஏன் வருகிறார். கடந்த 10 நாட்களாக இங்கேயே சுற்றுகிறார். அடுத்த 20 நாள் தமிழகத்தில் எங்கு சுற்றி வந்தாலும், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது. தமிழக மக்கள் அவர்களை ஓட ஓட விரட்ட தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

three + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi