சென்னை: தேர்தலில் பணம் பெற்று வாக்களித்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் பணம் பெற்று வாக்களித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஜனநாயகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் பொதுவாழ்வு கரைபட்டும், சீரழிந்தும் வரும் சூழலில் வழங்கியுள்ள தீர்ப்பு ஊழலை எதிர்த்து போராடி வருவோருக்கு ஊக்கமூட்டும்.
ஊழல்வாதிகளுக்கும், சுயநல ஆதாயம் தேடும் மலிவான மனிதர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.