சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் ஆகிய பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 11 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின்கீழ் வாக்கு பதிவு நடத்தப்பட்டது.
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தலைவர் பதவிக்கு ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.சி.பால்கனகராஜ், எம்.வேல்முருகன் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர். அதில் ஜி.மோகனகிருஷ்ணன் 1301 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1134 வாக்குகள் பெற்று ஆர்.சி.பால்கனகராஜ் தோல்வியடைந்தார். துணை தலைவர் தேர்தலில் அறிவழகன் 999 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவருக்கு அடுத்தபடியாக முரளி 653 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். செயலாளராக ஆர்.கிருஷ்ணகுமார் 1470 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக காமராஜ் 1015 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பொருளாளராக ஜி.ராஜேஷ் 804 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆனந்த் 657 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நூலகராக வி.எம்.ரகு 710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக என்.விஜயராஜ் 538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.