புதுக்கோட்டை: புதுக்கோட்ைட மாவட்டம் வேங்கைவயல், இறையூரில் கிராமங்களில் மொத்தம் 549 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமங்களுக்கு வேங்கைவயல் அரசு ஊராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. தபால் ஓட்டு செலுத்த முடியாத ஒருவர் இடிசி படிவத்தில் வாக்கு செலுத்தினார். இதேபோல் கீழமுத்துக்காடு பூத்தில் ஓட்டு போடவேண்டிய போச்சம்பட்டியை சேர்ந்த ஒரு வாக்காளர் வேங்கைவயல் பூத்தில் மாற்றி சேர்க்கப்பட்டதால் அவர் மட்டும் இன்று காலை வந்து வாக்களித்தார். ஆனால் வேங்கைவயலை சேர்ந்த ஒரு வாக்காளர் கூட காலை 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை. இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், வேங்கைவயலில் கழிவு நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறினர். இதேபோல் புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தேக்காட்டூர் பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியுடன் தேக்காட்டூரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சியில் உள்ள மேலதேமுத்துபட்டியை சேர்ந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.