காஞ்சிபுரம்: பாராளுமன்ற பொதுதேர்தல் முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்கவேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 11.3.2024 முதல் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 100% வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் வைத்து பிரசாரம் செய்தல், பள்ளி மாணவர்களுக்கு கலாசார போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், அரசு களப்பணியாளர்கள் மூலம் வீட்டிற்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுத்தல், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவு செய்துவது குறித்து விழிப்புணர்வு அளித்தல், சுயஉதவிகுழுக்கள் மூலம் மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல், மனித சங்கிலி, பைக் பேரணி போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தலைமை தேர்தல் அலுவலகம் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த குறும்படம் தயாரித்து குறுந்தகடு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுந்தகடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உள்ள அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் திரையிடப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் குறுந்தகடு திரையிடப்படுகிறது.
நேற்று முதல் 17.4.2024 வரை தினந்தோறும் குறுந்தகடு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிநவீன வீடியோ வாகனம் மூலம் ஒளிப்பரப்படும் தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கலைச்செல்விமோகன் தொடங்கி வைத்தார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மகளிர் திட்ட இயக்குநர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.