ஊட்டி : தமிழ்நாட்டில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் ஊட்டியில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
இவ்விழாவில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சாகுல் அமீது வரவேற்றார். அரசு பாலிெடக்னிக் கல்லூரி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஆணைகளை வழங்கி பேசியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற பின், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 முறை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூடலூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 1400 பேர் கலந்துக் கொண்டனர். இதில், 33 நிறுவனங்கள் கலந்துக் கொண்டன. இதில், 265 பேருக்கு உடனடியாக பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 2022ம் ஆண்டு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 5 ஆயிரத்து 912 பேர் கலந்துக் கொண்டனர். 165 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், 1697 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 3 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர். இதில், 165 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இதில், 628 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 3 ஆயிரத்து 670 பேர் கலந்து கொண்டனர். 85 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது. இந்நிலையில், ஊட்டியில் 5வது முறையாக வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 112 நிறுவனங்கள் பங்குபெற்று அதில் கலந்து கொண்ட 1124 பேரில் 317 நபர்களுக்கு உ்டனடியாக பணிநியமனஆணைகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்ெபறும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதிய வேலை வாய்பிற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுவரை தமிழகம் முழுவதும் நடந்த வேலை வாய்ப்பு முகாமின் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், மாணவர்கள் முன்னேற்றத்திற்காக எல்கேஜி முதல் உயர் கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு தமிழக முதல்வர் முன்னுரிமை அளித்து வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் சிறந்த பள்ளிகள் உள்ளன.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை அதிகம் என்பதால், பன்னாட்டு நிறுவனங்களில் எளிதாக வேலை கிடைக்கிறது. தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழில் முனைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ரூ.8.65 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், பல்வேறு தொழிற் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், வேலை நாடுனர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.