சென்னை: மக்கள் நலன் கருதி சாலை வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே வாகனங்கள் வாங்கும்போது ஆயுட்கால வரி செலுத்தியுள்ள சூழ்நிலையில், ஏன் நாங்கள் டோல்கேட் வரி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த டோல்கேட் வரியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படும் நிலையில், வாகனங்களுக்கான சாலை வரியை 5% அளவிற்கு உயர்த்த முடிவெடுத்திருப்பது தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவினை கலைக்கும் விதமாக, சாலை வரியை உயர்த்தும் முடிவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் 5 சதவீதம் சாலை வரியை உயர்த்தும் முடிவை மக்கள் நலன் கருதி உடனடியாக கைவிட வேண்டும்.