சென்னை: பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ள்ளார். எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில்,‘ விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். நான் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியபடி தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜிகே.வாசன் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் உள்ளனர். மேலும் விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.