சங்கரன்கோவில்: எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது பாஜதான். அவர் இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார்’ என்று எச்.ராஜா கூறினார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று அளித்த பேட்டி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது எங்களுக்கு நஷ்டம் இல்லை. அதிமுகவிற்குத்தான் நஷ்டம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி பிரிந்து இருந்தது.
சிதறி பிரிந்து கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜ தான்.. பிரிந்து இருந்த அதிமுக தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது பாஜ. எடப்பாடி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார். வருகிற 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜ தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.