திருச்சி: திருச்சியில் எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்த மாநாடு நடத்த உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகார மோதல் இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வானார். கட்சியை கைப்பற்ற ஓபிஎஸ் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பாஜவுடைய ஆதரவையும் இழந்த நிலையில் சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்களை எல்லாம் இணைத்து தனது பலத்தை காட்டுவதற்காக திருச்சியில் வரும் 24ம் தேதி ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார். இதற்கான ஆலோசனை கூட்டம், நேற்றிரவு திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. இதில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகரன், மனோஜ்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,‘‘ ஏப்.24ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாடு தர்மயுத்தத்திற்கான மாநாடாக அமையும். நம்முடைய எதிரிகள் கண்டு அச்சப்படும் அளவிற்கு சிறப்பான மாநாடாக இது அமைய வேண்டும். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது, இயற்றிய சட்டமான தொண்டர்களே தலைமை பொறுப்பாளர்களை நியமிப்பவர்கள் என்ற சட்டத்தை மதிக்காத எடப்பாடிக்கு பாடம் புகட்டக்கூடிய மாநாடாக இது அமைய வேண்டும். இந்த மாநாட்டின் வயிலாக ஒன்றரை கோடி தொண்டர்களின் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவதே நோக்கம். இதன்மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் உச்சபட்ச மரியாதை செலுத்த வேண்டும். நம்முடைய சக்தியும், கடைநிலை தொண்டனின் சக்தி வரை மாநாட்டில் எதிரொலிக்க வேண்டும். இந்த எதிரொலிப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே எதிரொலிக்க வேண்டும். இந்தியாவிற்கு நம்முடைய பலத்தை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- எடப்பாடிக்கு பாஜ ஆதரவா?
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் நிருபர்களை சந்தித்த ஓபிஎஸ்சிடம், தமிழ்நாட்டின் ஆளுநரின் செயல்பாடு குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். பாஜ எடப்பாடி அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக தோற்றம் உள்ளதே என்ற கேள்விக்கு, அது வெறும் தோற்றம் என்றார்.