சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகம், வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். 11, 12ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் 2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மயிலாடி, கன்னியாகுமரியில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் இயல்பை விட 1.6 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை நிலவியது. இவ்வாறு அவர் கூறினார்.