சென்னை: சந்திரயான் 3 விண்கலம் புவி வட்ட பாதையில் இருந்து விலகி அடுத்த கட்டமாக நிலவின் சுற்றுவட்டபாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் சந்திரயான் 3 செயற்கோள் புவிவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திரயான் விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு கட்டமாக புவி சுற்றுவட்டபாதையில் விண்கலத்தை உயர்த்தும் பணி நடந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12.15 மணியளவில் புவியின் இறுதி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியுள்ளது. மேலும் சந்திரயான் 3 செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: சந்திரயான் 3 நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கிய தனது 40 நாள் பயணத்தில் முதல் 17 நாட்கள் புவி வட்ட பாதையில் விண்கலம் சரியாக பயணித்தது ஒவ்வொரு சுற்றுவட்டபாதைக்கும் உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணிப்பதற்கு ஏற்புடைய சூழல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ளது. நிலவின் சுற்றுவட்டபாதை எனப்படும் லூனார் ஆர்பிட்டை நோக்கி பயணத்தை நள்ளிரவு 12.15 மணியளவில் தொடங்கியது. வரும் 5ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு நகர்த்தப்படும் தொடர்ந்து நிலவை சுற்றிவந்து படிப்படியாக நிலவுக்கு அருகே பயணிக்கும் பின்பு 23ம் தேதி செயற்கைக்கோள் தரையிறக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் புரொப்பலன்சன் மாட்யூல் இயக்கப்பட்டு நிலவிற்கு அருகில் சென்று அங்கிருந்து விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கும். மேலும் சந்திரயான் 3 செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது, தொடர்ந்து விண்கலத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.