சில்குரி: மேற்குவங்கத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் கடந்த 25ம் தேதி மேற்குவங்கத்தில் நுழைந்தது. 2 நாள் ஓய்வுக்கு பிறகு நாளை முதல் மேற்குவங்கத்தில் பயணத்தை தொடங்க ராகுல் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நீதி பயணத்தின் ஒருபகுதியாக மேற்குவங்கத்தில் நடத்த இருந்த பொதுகூட்டங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்து விட்டது.
இதுகுறித்து சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “பேரணியின்போது பொதுகூட்டங்கள் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் மேற்குவங்கத்தில் பொதுதேர்வுகள் தொடங்க உள்ளதால் அனுமதி தர மாநில நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிலிகுரி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ராகுலின் நீதி யாத்திரை சிக்கலை எதிர்கொண்டுள்ளது” என்று இவ்வாறு கூறினார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூறுகையில், அரசு நிர்வாகத்தில் திரிணாமுல் கட்சி தலையிடாது. பள்ளி தேர்வுகளை கருத்தில் கொண்டு அதிகாரிகள் முடிவு எடுத்திருப்பார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த எந்த தடையும் இல்லை என்றார்.