புதுடெல்லி: துபாய் பருவநிலை மாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் எடுத்துக் கொண்ட செல்பி சமூக ஊடகங்களில் வைரலானது. ஐநாவின் உலக பருவநிலை செயல்திட்ட மாநாடு (சிஓபி28) துபாயில் நடந்தது. இதில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி அவருடன் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை மெலோனி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். மேலும், இரு தலைவர்களின் குடும்ப பெயர்களை இணைத்து ‘மெலோடி’ என்ற ஹேஷ்டேக்குடன், ‘சிஇஓ28ல் நல்ல நண்பர்கள்’ என்ற கருத்தை பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. நேற்று வரை 2.4 கோடி பேர் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளனர். மேலும், மெலோடி ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இதற்கு தனது டிவிட்டரில் பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘நண்பர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது’’ எனக் கூறி உள்ளார்.
இதே போல, கத்தார் அதிபர் அமீர் ஷேக் தமிிம் பின் ஹமாத் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கத்தாரில் உளவு பார்த்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் 8 இந்திய மாஜி கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, கத்தார் அதிபரை சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.