சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி, சென்னையில் ஒருங்கிணைந்த 9 மாவட்டங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்தது. நிர்வாகிகள் தம்பிதுரை, பா.வளர்மதி, பரமசிவம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கோஷம் எழுப்பினர். திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி அருகில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் பென்ஜமின், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி ஆகியோர் பேசினர். காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.