மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தீவிர ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த காரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 2 பேர், காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பி ஓடினர்.
காரில் போலீசார் சோதனை செய்தபோது, அட்டை பெட்டிகளில் போதை மாத்திரை பண்டல்கள் இருந்தன. காருடன் அவைகளை பறிமுதல் செய்த போலீசார், மண்டபம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.1.50 கோடி என கூறப்படுகிறது.