திருப்போரூர்: செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர் ஆகிய மூன்று வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் செங்கல்பட்டு வனச்சரகத்தில் 7292.69 ஹெக்டேர் வனப்பகுதியும், திருப்போரூர் வனச்சரகத்தில் 5613.03 ஹெக்டேர் வனப்பகுதியும், மதுராந்தகம் வனச்சரகத்தில் 4897.82 ெஹக்டேர் வனப்பகுதியும் உள்ளது. திருப்போரூர் வனச்சரகத்தில் காட்டூர், செம்பாக்கம், இள்ளலூர், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதிகளில் புள்ளி மான், வெளி மான், முள்ளம்பன்றி, உடும்பு, முயல், மயில், நரி, பறவைகள், பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் மான்கள் தண்ணீர் தேடி அடிக்கடி செம்பாக்கம் ஏரி மற்றும் இள்ளலூர் ஏரி, மடையத்தூர் ஏரி ஆகியவற்றுக்கு வருகின்றன.
இவ்வாறு வரும்போது சாலையை கடக்க வேண்டி இருப்பதால் அவை வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இதையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் உத்தரவின்பேரில். வன ஊழியர்கள் டிராக்டர் மூலம் மான்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள குட்டைகள், தண்ணீர் தொட்டிகளில் குடிநீரை கொண்டு சென்று ஊற்றிவிட்டு வருகின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் இவ்வாறு வன விலங்குகளுக்கு தண்ணீர் ஊற்றப்படுவதால், அவை தண்ணீர் தேடி சாலையை கடந்து ஏரிகளுக்கு வருவதும், அதனால் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.