Sunday, May 19, 2024
Home » டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்

by Ranjith

பூந்தமல்லி: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்த்தும், ஆயுள் தண்டனையை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நேற்று தொடங்கியது. நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கடந்த 2013 செப்டம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், இன்ஜினியரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2021 ஆகஸ்டு மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பொன்னுசாமி, பாசில் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம் வழக்கு தொடர்பான விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தன.

முதலில் காவல் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பிரபாகரன் வாதங்களை முன்வைத்தார். அப்போது, டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் நிலப்பிரச்னை எப்படி உருவானது, கொலைக்கான சதி திட்டம் தீட்டியது, ஆயுதங்கள் வாங்கியது, இது சம்பந்தமாக அரசுத்தரப்பு சாட்சியங்கள் ஆகியவை குறித்து சிறப்பு வழக்கறிஞர் விவரித்தார்.

மேலும், கொலை செய்ய கூலிப்படையினருக்கு கொடுப்பதற்காக 7.5 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் விவரித்தார். இதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நேரில் பார்த்ததாக கூறப்படும் இரு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இரு ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கைதானவர்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கப்பட்டது என்று வாதிடப்பட்டது. இன்றும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

You may also like

Leave a Comment

18 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi