சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா – அமர்வு -1, சென்னை வேலப்பன் சாவடி ஏ.சி.எஸ் மருத்துவமனையில் உள்ள கன்வென்ஷன் அரங்கில் நேற்று நடந்தது. இதில், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு முனைவர் பட்டங்கள், அனைத்து துறைகளிலும் முதல் இடங்களை பிடித்த முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரி மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், தேர்வில் வெற்றிபெற்ற 2,372 யு.ஜி, பி.ஜி மற்றும் பி.எச்.டி மாணவியருக்கு அவரவர் தேர்ச்சி பெற்ற படிப்புகளில் பி.எச்.டி, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்.சி, பி.பி.டி, எம்.டி/எம்.எஸ், எம்.டி.எஸ், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, மற்றும் எம்.பி.டி பட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவில், ரஷ்ய நாட்டின் குர்ஸ்க் மாநிலத்தின் மருத்துவ பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு கவுரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. நிகழ்ச்சியில், பல்கலை தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், செயலாளர் ஏ.ரவிக்குமார், வேந்தர் ஆர்.எம்.வாசகம், துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, முதன்மை கல்வியாளர் ஜி.கோபாலகிருஷ்ணன், முகவர் டி.விஸ்வநாதன், இணை துணை வேந்தர்கள் எம்.கே.பத்மநாபள், எம்.ரவிச்சந்திரன், சி.எஸ்.ஜெயசந்திரன், இயக்குநர் – சட்டம் ஜி.சி.கோதண்டன், என்.வாசுதேவன், கே.தனவேல், ஏ.ஞானசேகரன், பதிவாளர் சி.பி.பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.