Sunday, September 1, 2024
Home » வறட்சி பூமிக்கு வளம் தரும் பூக்கள்!

வறட்சி பூமிக்கு வளம் தரும் பூக்கள்!

by Porselvi

ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைசி எல்லையில் அமைந்திருக்கும் ஊர்தான் கமுதி. இதன் அருகே நீராவி, கீழமுடிமன்னார் கோட்டை, கீழராமநதி, மேலராமநதி, கிளாமரம் போன்ற கிராமங்கள் தொடர்ச்சியாக அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதி களில் வசிக்கும் மக்கள் நெல், மிளகாய் போன்ற பயிர்களோடு மக்காச்சோளம், சிறு தானியங்கள், வாழை உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்கிறார்கள். இந்தப் பயிர்களின் வரிசையில் பந்துப்பூ சாகுபடியும் சேர்ந்திருக்கிறது. கமுதியைச் சுற்றியுள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 சென்ட், அரை ஏக்கர் என சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பந்துப்பூ சாகுபடி பட்டையைக் கிளப்பிவருகிறது. குறைந்த முதலீட்டில், குறைவான பராமரிப்பில், அதிக லாபம் எடுக்கலாம் என்பதால் இந்தப் பூ சாகுபடியில் பெண்களே அதிகமாக ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் பந்துப்பூ சாகுபடியில் ஈடுபட்டு வரும் கிளாமரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்கிற பெண் விவசாயியைச் சந்தித்தோம். மஞ்சள் நிறங்களில் பூத்துக்குலங்கும் பந்துப்பூக்களைப் பறித்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

எங்கள் ஊரில் தொடர்ச்சியாக விவசாயம் நடந்தபடியே இருக்கும். வயலை யாரும் வெறுமனே போட்டு வைக்கமாட்டார்கள். நெல், மிளகாய், பருத்தி என ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்வார்கள். இப்போது பந்துப்பூ விவசாயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் எங்கள் ஊர் மக்கள். நானும் எனது அரை ஏக்கர் நிலத்தில் பந்துப்பூ விவசாயம் செய்துவருகிறேன். இந்தப்பூ பல ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதாவது, செண்டுமல்லி, துளுக்க சாமந்தி, கச்சா பூ என அழைக்கப்பட்டாலும் எங்கள் ஊரில் இது பந்துப்பூதான். பந்துப்பூ சாகுபடியைப் பொருத்தவரை நாற்றங்கால் அமைத்தும், நேரடி விதைப்பு முறையிலும் செய்யலாம். நாங்கள் எங்கள் நிலத்தில் நாற்றங்கால் நடவுதான் செய்தோம். எங்களுக்குத் தேவையான நாற்றுக்களை, நாங்களேதான் விதை விதைத்து, நாற்றாக வளர்த்து, அதைப் பறித்து, நடவு செய்தோம்.

அரை ஏக்கரில் நடவு செய்ய சுமார் 5 ஆயிரம் செடிகள் வரை தேவைப்படும். ஒருமுறை நடவு செய்தால் 5 மாதங்களில் அறுவடை செய்யலாம். நாற்று நடுவதற்கு முன்பாக நிலத்தை தயார் செய்வது முக்கியம். அதாவது, நாற்று நடுகிற நிலத்தை மண்ணைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு உழவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். எங்கள் பகுதியில் மண் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் என்பதால் நாங்கள் இரண்டு முறை உழவு செய்தோம். முதல்முறை உழவின்போது மக்கிப்போன மாட்டுச்சாணம் மற்றும் இலை, தழைகளை நிலத்தில் இட்டு உழவு செய்தேன். அதன்பிறகு ஒரு வாரம் இடைவெளி விட்டு இரண்டாவது உழவு செய்தேன். இந்த இரண்டாவது உழவின்போது மண் நன்றாக மேலும் கீழுமாக சென்று, இறுக்கம் குறைந்து, பொலபொலப்பாகிவிடும். ஏற்கனவே கொடுத்த உரங்கள் மண்ணில் நன்றாக பரவி நாற்று நடுவதற்கு தோதாக இருக்கும். இந்த சாகுபடிக்கு கிணற்றுப் பாசனம் இருந்தாலே போதுமானது. தற்போது பெய்து வரும் தொடர்மழையால் போதிய தண்ணீர் கிடைப்பதால் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

நன்றாக உழவு செய்து தரமான நாற்றுகளை நட்டு, தேவையான சமயத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதேபோல், பூச்செடிகளுக்கு நடுவில் களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்துவந்தால் ஒரு சீசனுக்கு ஒரு செடியில் இருந்து மட்டும் குறைந்தபட்சமாக ஒரு கிலோ பூ வரை எடுக்கலாம். அப்படி செய்துவந்தால் ஒரு ஏக்கருக்கு சராசரியாக நான்கு டன் வரை பூ எடுக்கலாம். உரம் இடுதல், பூ பறித்தல், உழவு ஓட்டுதல் போன்ற பணிகளுக்கு சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். விழாக்காலங்களில் ஒரு கிலோ பூ ரூ.70 முதல் ரூ.120 வரை விலை போகும். சில நேரங்களில் அதிக உற்பத்தி காரணமாக விலை கடுமையான வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.20 என்று கூட விற்கும். சராசரி யாக ஒரு கிலோ பந்துப்பூ ரூ.30க்கு விற்கப்பட்டாலும் கூட 4 டன் பூக்கள் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். உழவு, உரம், பராமரிப்பு என அனைத்து பணிகளுக்கும் சேர்த்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இதுபோக சுமார் 70 ஆயிரம் சுளையாக லாபம் கிடைக்கும். எங்கள் பகுதியில் இந்தப் பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவதால் மொத்த வியாபாரிகள் நேரடியாக வயலுக்கே வருகிறார்கள். நாங்கள் அறுவடை செய்யும் பூக்களை வாங்கிச்சென்று அருப்புக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். செடி வைத்துவிட்டால் போதும். பராமரிப்புப் பணிகள் அதிகம் கிடையாது. பெரிய பூக்கள் என்பதால் நாமே இதை அறுவடை செய்து விடலாம். ஆட்கள் வைக்கத் தேவையில்லை. இதனால்தான் பந்துப்பூ சாகுபடி எங்கள் பகுதியில் அதிகமாக நடக்கிறது’’ எனக் கூறும் பஞ்சவர்ணத்தின் முகத்தில்
புன்னகை மின்னுகிறது.

பராமரிப்பு

ஒருமுறை பந்துப்பூக்களை சாகுபடி செய்து, அறுவடை எடுத்து முடிந்தபிறகு நிலத்தை அப்படியே போடாமல் அடுத்த உழவிற்கு தயார் செய்ய வேண்டும். அதாவது, பூ அறுவடை முடிந்த பிறகு காய்ந்த நிலையில் உள்ள செடிகளோடு மக்கிப்போன மாட்டுச் சாணம் மற்றும் இயற்கை உரங்களைப் போட்டு உழவு செய்தால் அடுத்த பட்டத்திற்கான விவசாயத்தைத் தொடங்கும்போது சத்து மிகுந்த நிலமாக மாறி இருக்கும். ஒவ்வொரு நிலத்திற்கும் கோடை உழவு, மழைதுவங்கும் காலத்திற்கான உழவு, பயிரிடும்போது செய்யப்படும் உழவு என மூன்று உழவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த உழவுகளோடு, அறுவடை முடிந்த நிலத்தை, செடி கொடிகளோடு சேர்த்து உழவுசெய்தால், தழைச்சத்து மிகுந்து மண்வளம் சிறக்கும்.

நோய்களும் தீர்வுகளும்

பந்துப்பூச்செடிகளில் அவ்வப்போது சில நோய்கள் ஏற்படும். அதை முறையாக கையாள வேண்டும். இதன் இலைகளில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி, இலைகள் வெளுத்துவிடும். இதனால் செடிகளின் வளர்ச்சி குறைந்து மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். அதேபோல செடிகள் திடீரென வாடி காய்ந்து விடும். செடிகளின் வேர்கள் அழுகி காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து செடிகளைச் சுற்றி ஊற்ற வேண்டும்.

சாமந்திப்பூவைத்தான் கமுதி பகுதியில் பந்துப்பூ என அழைக்கிறார்கள். சாமந்திப்பூவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். அதன்படி இந்தப் பகுதியில் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். பந்து போன்ற வடிவத்தில் பெரிதாக இருப்பதால் இந்தப் பெயரோடு கமுதி பகுதியில் வாசம் வீசுகிறது சாமந்தி. அங்குள்ள மக்கள் பேசும் வட்டாரச் சொல்லையே நாமும் இங்கு பயன்படுத்தி இருக்கிறோம்.

You may also like

Leave a Comment

16 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi