செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் சன்னதி தெருவில் வசித்து வந்தவர் கல்யாணராமன் (75). இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை பெத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணராமன் உயிரிழந்தார். தான் இறந்தால் தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும் என கல்யாணராமன் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்பேரில், கல்யாணராமனின் சிறுநீரகங்கள் இரண்டும் தானம் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, மறைந்த கல்யாணராமன் உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் சார் ஆட்சியர் நாராயண சர்மா நேற்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். அப்போது, அவரது உறவினர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், காவல் துறை சார்பில் மறைமலை நகர் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உடன் துணை வட்டாட்சியர் சாமி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இருந்தனர்.