தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் மதுரையில் தனிச்சயம், அலங்காநல்லூர், குட்டி மேய்க்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: அதிமுகவில் பொதுச் செயலாளர், துணைச் செயலாளர் பதவியில் இருந்த எங்களை திடீரென கட்சியை விட்டு விலக்கினால், நாங்கள் என்ன விரல் சப்ப முடியுமா? துரோகிகள் கையில் அதிமுக உள்ளது. அதனால் தான் அமமுக கட்சி தொடங்கினேன்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார், எனது வீட்டு காவல்நாயாக இருந்ததாகவும், இப்போது சீறும் சிங்கமாக மாறி விட்டதாகவும் கூறியிருக்கிறார். நாய் என்றும் சிங்கமாகாது, நாய் ஓநாயாக வேண்டுமானால் மாறும். ஆனால் ஒருபோதும் சிங்கமாக மாறாது. எங்கள் வீட்டு காவலாளிகள் யாரும் எங்களை விட்டு போகவில்லை. எங்களுடன் தான் உள்ளார்கள்.
அவர்கள் நன்றியுள்ளவர்கள், இவர்கள்தான் நன்றி இல்லாதவர்கள். நானும் சகோதரர் பன்னீர்செல்வமும் இணைந்து இருப்பதே துரோகிகள் கையில் அபகரித்து வைத்துள்ள இரட்டை இலை மீட்டெடுப்பதற்காக மட்டுமே. அதை திசை திருப்பும் நோக்கில், திருடுபவர்கள் திருடன் திருடன் என்று கூறுவது போல் இப்படி பேசுகிறார்கள். துரோகம் செய்தவர்களால் தான் இரட்டை இலை பலவீனமாகிறது. அதனை நானும் பன்னீர்செல்வமும் இணைந்து மீட்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* டிடிவிக்கு ஓட்டு கேட்ட மனைவி
போடி அருகே உள்ள கிராம பகுதிகளான திம்மிநாயக்கன்பட்டி, குட்டிபுரம், ராமகிருஷ்ணபுரம், உள்ளிட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா முதல்முறையாக பிரசாரம் செய்தார்.