ஊட்டி : தொட்டபெட்டா செல்லும் நுழைவு வாயில் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நீடித்த பனிப் பொழிவு காரணமாக அனைத்து பகுதிகளிலும் உள்ள செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்து போயுள்ளன. மேலும், கடந்த 4 மாதங்களாக மழை பெய்யாத நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வனங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள புதர் செடிகள் அனைத்தும் காய்ந்து காணப்படுகிறது. இதனால், எளிதாக காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையில், தொட்டபெட்டா நுழைவு வாயில் பகுதியில் சாலையோரத்தில் இருந்த புதர் செடிகளில் காட்டு தீ ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால், தீ மள மளவென பரவ துவங்கியது. இதனை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஊட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்துச் சென்ற தீயணைப்பு துறையினர், காட்டு தீயை அணைத்தனர். காட்டு தீ அணைக்கும் பணிகள் மேற்கொண்டதால், சிறிது நேரம் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.