Wednesday, June 5, 2024
Home » வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை: புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி

வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை: புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி

by Karthik Yash

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26ம்தேதி மலம் கலக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஏடிஎஸ்பி ரமேஷ்கிருஷ்ணன் தலைமையிலான விசாரணைக்குழுவினர், வெள்ளனூர் காவல்நிலையத்தில் 85 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு கடந்த ஜனவரி 14ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார் இறையூர், வேங்கைவயல், கீழ முத்துக்காடு, காவிரிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 147 பேரிடமும், ஒரு சிலரை திருச்சி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம், இவ்வழக்கில் உரிய முறையில் விசாரணை நடப்பதை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கு இடமாக உள்ள 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பரிசீலனை செய்த நீதிபதி சத்யா, வேங்கைவயலை சேர்ந்த 9 நபர்கள், இறையூர் மற்றும் கீழமுத்துக்காடு பகுதியை சேர்ந்த தலா ஒரு நபர் என 11 பேரிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் தலைமையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை எடுக்க அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து வரும் 24ம்தேதி குழுவினர் அந்த 11 பேரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர்.

You may also like

Leave a Comment

eight − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi