சென்னை: தயாநிதி மாறான் வங்கி கணக்கில் எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்சிஸ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. பணம் திரும்ப கிடைத்தது தொடர்பாக ஆக்சிஸ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனிடம் ‘சைபர்’ மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறன் எம்.பி. வங்கி கணக்கு விவரங்களை தராமல் அந்த இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் தயாநிதி மாறன் எம்.பி.யின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் இடம் பெற்றிருந்தது.
இந்த மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார். வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண் எதையும் பகிராமல் தனது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிட்டார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தயாநிதி மாறான் வங்கி கணக்கில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தரப்பில் இருந்து யாரும் போன் செய்யவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி ஒரு நபர் உங்களுக்கு இடுகையிட்டதைக் கவனித்தோம். எங்கள் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளால் பதில் வெளியிடப்படவில்லை. மற்ற சுயவிவரத்துடனான எந்தவொரு தொடர்புகளையும் உடனடியாக நிறுத்துமாறும், எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று வங்கி கூறியுள்ளது.