Wednesday, May 22, 2024
Home » திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகரின் மகன் சரமாரி வெட்டி கொலை: மர்ம நபர்கள் 6 பேருக்கு வலை

திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகரின் மகன் சரமாரி வெட்டி கொலை: மர்ம நபர்கள் 6 பேருக்கு வலை

by Neethimaan


திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே இன்று காலை திமுக பிரமுகரின் மகனை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் சரமாரி வெட்டி கொன்றது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் அருகே விம்கோ நகர், பூம்புகார் நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். அப்பகுதி திமுக பிரதிநிதி. இவர், தனது வீட்டின் அருகே ஆர்.வி இன்ஜினியரிங் என்ற கட்டிட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் காமராஜ் (34). பட்டதாரியான இவர், தனது தந்தையின் கட்டுமான நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

காமராஜுக்கு மனைவி யாமினி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், விம்கோ நகரில் உள்ள தங்களின் நிறுவன அலுவலகத்துக்கு இன்று காலை காமராஜ் வந்துள்ளார். அங்கிருந்த அலுவலக ஊழியர் அன்பு என்பவரிடம், இன்றைய பணிகள் குறித்து காமராஜ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தது. காமராஜை சுற்றி வளைத்து, பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டியது. பின்னர் அலுவலகத்துக்கு வெளியே தயார்நிலையில் இருந்த 3 பேர் என மொத்தம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்குகளில் தப்பி சென்றது. மர்ம கும்பலின் தாக்குதலில் காமராஜின் முகம், கை-கால் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே காமராஜ் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் எண்ணூர் சரக காவல் உதவி ஆணையர் பிரமானந்தம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில், தனது தந்தையின் ஆர்.வி கட்டுமான நிறுவனத்தின் மூலம் பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகளை காமராஜ் மேற்கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மர்ம கும்பல் ஒன்று கடந்த சில நாட்களாக செல்போனில் பெருந்தொகையை மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்து, காமராஜை மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், காமராஜை மட்டும் குறிவைத்து தாக்கிவிட்டு, அங்கிருந்த வயதான ஊழியர் அன்புவை வெளியே இழுத்து சென்று விட்டுள்ளது எனத் தெரியவந்தது. மர்ம கும்பல் தாக்குதலில் பலியான காமராஜின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் விம்கோ நகரில் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று பட்டப்பகலில் திமுக பிரமுகரின் மகன் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

4 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi