விழுப்புரம் : விழுப்புரத்தில் திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்தியவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குறித்தும் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன் அவதூறாக பேசினார்.இதையடுத்து திமுக தரப்பில் கலிவரதன் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று நள்ளிரவு கலிவரதனை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத்தலைவர் கலிவரதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கலிவரதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட பாஜகவினர் பல்வேறு புகார்களை கூறி கலிவரதனை மாற்ற வேண்டும் என போராட்டங்கள் நடத்தினர். இவர் மீது ஏற்கனவே பாலியல் புகாரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.