சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமைக்கழகச் சட்ட தலைமை ஆலோசகர் பி.வில்சன் எம்.பி. நேற்று அளித்த பேட்டி: ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுக மற்றும் திமுக தலைவர்களைச் சிலர் கூறி வருகிறார்கள். விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே என்சிபி துணை இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது, அதுவும் தேர்தல் நேரத்தில் சொல்வது சந்தேகத்தை தருகிறது. இதுபோன்ற பேட்டிகள் அவதூறு செய்யும் எண்ணத்தில் செயல்படுவதாகவே தெரிகிறது. கட்சியையோ, கட்சி தலைவர்களையோ இணைத்து எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால் அவர்கள் மீது நிச்சயமாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம்.
தேவையில்லாமல் அடிப்படை ஆதாரம் இல்லாமல் கட்சியை விட்டு வெளியே அனுப்பியவர் குறித்துப் பேசுகிறார்கள். தகவல் வந்தவுடன் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் மீது குற்றப்பத்திரிகை கொடுத்துள்ளார்கள். அவரைப் பதவியிலிருந்து எடுத்தார்களா, ஆளுநரும் அந்த வழக்கிற்கு அனுமதியே கொடுக்கவில்லை, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகே விஜயபாஸ்கர் மீது மட்டுமல்லாமல் ரமணா மீதும் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. போதைப் பொருளை ஒழிப்பதற்கு திமுகவைப் போன்று எந்த கட்சியும் நடவடிக்கை எடுத்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.