சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இனி வரும் வாரங்களில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் உறுதி செய்யப்படும்.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம். எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது தொடர்பாக திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை பெறலாம் என்று திமுக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்பும் திமுக தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து மார்ச் 1 முதல் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் சேர்க்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்-ரூ.50,000. விண்ணப்பப டிவத்தை தலைமை கழகத்தில் ரூ.2,000 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.