சென்னை: பிறப்பால் பாகுபாடு காட்டினால் சமத்துவம் பிறக்காது என்று வி.பி.சிங் மகன் அபய் சிங் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா நடைபெற்றது. சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திறந்து வைத்தனர். வி.பி.சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் அவரது மகள் அபய் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வி.பி.சிங் கொண்டுவந்த போது உயர்ஜாதியினரால் அவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்ஜாதியினர் வன்முறையை கட்டவிழ்த்தவிட்டனர். இடஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்ஜாதியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டபோதும் வி.பி.சிங் நடவடிக்கைக்கு பெரும் ஆதரவு இருந்தது.
அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சில இளைஞர்கள் என்னை தேடி வந்தனர். நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? என பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல் என்பது 85 சதவீத நாட்டு மக்களின் குரலாகும். பிறப்பால் பாகுபாடு காட்டினால் சமத்துவம் பிறக்காது என்றார். மேலும், சென்னையில் வி.பி.சிங் சிலை அமைத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்வதாக வி.பி.சிங் மகன் அபய் சிங் தெரிவித்தார்.