Sunday, June 16, 2024
Home » மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு கோயில் சார்பில் 4 கிராம் பொன் தாலி: திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி, கோவை, கோயில்களுக்கு ரோப் கார் வசதி; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு கோயில் சார்பில் 4 கிராம் பொன் தாலி: திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி, கோவை, கோயில்களுக்கு ரோப் கார் வசதி; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு நடப்பாண்டு முதல் 4 கிராம் பொன் தாலி கோயில் சார்பில் வழங்கப்படும். பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு 249 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவை,

  • ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு, அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும்.
  • தமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் கிராம தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களான அம்மன், அய்யனார், ஏழு கன்னிமார்கள் போன்ற திருவுருவங்களை பாதுகாத்து சீரமைக்கும் பணி முதற்கட்டமாக 6 கோயில்களில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.
  • பழையாறை, திண்டல், உள்ளிட்ட 15 கோயில்களில் ரூ.25.98 கோடியில் ராஜகோபுரங்கள் கட்டப்படும்.
  • 32 கோயில்களின் குளம் ரூ.10.04 கோடியில் சீரமைக்கப்படும்.
  • திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் கோயில்கள் ரூ.7 கோடியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
  • வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 3 நாள் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
  • நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 8 கோயில்களில் நடைபெற்று வருகிறது. தற்போது மேலும் 3 கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மேலும் 7 கோயில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்கப்படும்.
  • கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் நடப்பாண்டு முதல் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி கோயில் சார்பில் வழங்கப்படும்.
  • தற்போது 15 ஆயிரம் கோயில்களில் நடைமுறையில் உள்ள ஒரு கால பூசைத் திட்டம் மேலும் 2 ஆயிரம் கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.
  • ஒரு கால பூசை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் மேற்படிப்பு நலன் கருதி ஆண்டுதோறும் 400 வழங்கிட தனியாக ஒரு மைய நிதி ஏற்படுத்தப்படும்.
  • ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4000 உயர்த்தி வழங்கப்படும்.
  • நடப்பாண்டு முதல் கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ஆயிரம் ரூபாய்.
  • கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் பெற ஏதுவாக கோயில்களில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் பணி அனுபவம் பெற வாய்ப்பளித்து ரூ.6 ஆயிரம் மாத ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஓலைச் சுவடிகள் மற்றும் மூலிகை ஓவியங்கள் ஆய்வு மையம் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • மயிலாப்பூர், திருவள்ளுவர் கோயிலில் ரூ.15 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் திருத்தேர் ரூ.3.95 கோடியில் உருவாக்கப்படும்.
  • திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட சிறப்பு நடைபாதை ரூ.50 இலட்சத்தில் அமைக்கப்படும்
  • சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ,மதுரை கள்ளழகர் கோயில் ஆகிய 5 கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, ரூ.200 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • சென்னையிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திருத்தணியில் ரூ.3 கோடியில் இளைப்பாறும் மண்டபம் கட்டப்படும்.
  • ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் சார்பாக, திருமலையில் பக்தர்களுக்கு கூடுதலாக தங்கும் விடுதி ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் விரைவாகத் தரிசனம் செய்யும் பொருட்டு தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
  • பக்தர்கள் பெருவாரியாக வருகை புரியும் திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகியகோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடை நிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும்.
  • இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப்பிரிவின் வாயிலாக முதற்கட்டமாக 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. இவ்வாண்டு மேலும் 108 அரிய நூல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்படும்.
  • நாமக்கல், லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சார்பாக அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி புதிதாக தொடங்கப்படும்.
  • பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் வசதி ரூ.32 கோடியிலும், கோவை மாவட்டம் சுப்பிரமணிசாமி கோயிலுக்கு ரூ.14 கோடியிலும், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.12.05 மதிப்பிலும், திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.8.17 கோடி மதிப்பிலும் ரோப்கார் வசதி செய்யப்படும்.
  • திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருச்செங்கோடு கோரக்குட்டை இளையபெருமாள் கோயிலில் ரோப் கார் வசதி அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi